பாம்பன் சுவாமிகள் – உண்மை கதை
பாம்பன்
ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப
பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத்
திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர்
குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால்,
அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான
சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில்
இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக
கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள்
இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு
அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப்
பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார்.
சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக
கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க
பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு
நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு
செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு
கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.
அன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது
முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து,
அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது
என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக்
கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான்
பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே
அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை
கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை
பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள்
அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம்
கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான்
தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார்.
அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள்
தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும்
செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த
துறவியார் வாழ்விலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம்
ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு
கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக
சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். ஒரு மூர்த்தி வழிபாடே
சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும்
முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு,
ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள்
பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த
வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக
கவசம் ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான
மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம்
செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர். பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான
முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை
பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி
பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன்
பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான்
என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம்
திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார். மயூர
வாகன சேவன விழா: முருகன் மீது சண்முக கவசம் உள்ளிட்ட 6666 பாடல்களைப் பாடிய
அருளாளர் பாம்பன்சுவாமி. 1923, டிச.27ல் சென்னை தம்புச் செட்டித்தெருவில்
குதிரை வண்டி மோதியதால் சுவாமியின் இடதுகால் முறிந்து போனது. அரசு
மருத்துவமனை மன்றோ வார்டில் அனுமதிக்கப்பட்டார். வயது 73 என்பதாலும், உப்பு
சேர்க்காமல் உணவு உண்பவர் என்பதாலும், குணமாவது சிரமம் என்று அறுவை
சிகிச்சை செய்ய மறுத்து விட்டனர். பாம்பன் சுவாமி தான் பாடிய சண்முககவசத்தை
பாராயணம் செய்தபடியே இருந்தார். 1924, ஜனவரி 6 இரவில், மருத்துவமனையில்
சேர்ந்த 11வது நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் தோகை விரித்தபடி
இருமயில்கள் ஆடுவதை சுவாமி கண்டார். இன்னும் 15 நாளில் குணமாகும் என்று
அசரீரி ஒலித்தது. குழந்தை வடிவ முருகனும் சுவாமிக்கு காட்சியளித்தார்.
அதன்படி பூரணகுணமும் பெற்றார். சென்னை அரசு மருத்துவமனை 11வது வார்டு
பதிவுக்கல்லில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை
திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியில், ஆண்டுதோறும் மார்கழி வளர்பிறை
பிரதமையன்று, மயூரவாகன சேவன விழாவை வாக மகா தேஜோ மண்டல சபையினர் நடத்துவர்.
அப்போது சுவாமி எழுதிய, அசோக சாலவாசத்தை வாசிப்பர். இதில் அவரின் தெய்வீக
அனுபவம் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment