Tuesday, October 15, 2013

தங்கப்புதையலை காக்கும் ஒற்றைக்கண் பூதம்..?!



தங்கப்புதையலை காக்கும் ஒற்றைக்கண் பூதம்..?!

சேலம் மாவட்டத்தில் ஊரை விட்டு ஒதுங்கி தவமிருக்கிறது அந்த ஒற்றை மலை... மலையில் இருக்கிறது ஒரு குகை. அதற்குள்தான் ஏகப்பட்ட மர்மங்களும், பீதி கிளப்பும் தகவல்களும் புரியாத புதிர்களும் குவிந்து கிடக்கின்றன.

குகைக்குள்ளே இருக்கும் தங்கப் புதையலை காவல் காக்கிறார் சித்தர்.... எந்த பொருள் மீது ஊற்றினாலும் அதை தங்கமாக மாற்றும் அற்புத மூலிகையை கண்டவர்தான் இந்த சித்தர். அவரையும் குகையில் உள்ள பாதாள அறையையும் நெருங்க முடியாதபடி இப்போதும் ஒற்றைக்கண் பூதம் ஒன்று காவல் காத்து நிற்கிறது என்ற நம்பிக்கை இன்றும் அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையில் இருக்கும் பாதாள குகை முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்கள் தவறாமல் வழிபட்டு வருகின்றனர்.

பாதாள குகைக்குள் விஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்த குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர் என்றும் கூறப்படுகிறது. குகைக்குள் உள்ள மைதானம், நாலுகால் மண்டபத்தில் தங்கப்புதையல் இருப்பதாகவும், இந்த புதையலை சித்தர்தான் இன்றைக்கும் பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர். சிலர், இன்னும் ஒருபடி மேலாக, தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி இன்றும் சித்தர் ஓய்வெடுத்து வருகிறார் என்கின்றனர்.

குகைக்கு வெளியே மலைப்பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன.மலை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று விசாலமானது. 2&வது அறை சிறியது. இந்த அறையில்தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது. குகைக்குள் என்னதான் இருக்கிறது, பார்த்துவிடுவோமே என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள், முயற்சி செய்துள்ளனர். அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம்கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டனர்.

குகையை பற்றி உலவும் மர்மங்களை தெரிந்து கொள்வதற்காக வழிப்போக்கர்கள் சிலர் அதை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது குகையின் நுழைவாயில் பகுதியில் ஒற்றைக்கண் உருவம் ஒன்று பதிவாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் மீண்டும் டிஜிட்டல் கேமராவில் கிளிக் பட்டனை அழுத்தியபோதும் அந்த ஒற்றைக்கண் உருவம் அழுத்தமாகவே பதிந்திருந்ததைப் பார்த்து பகீர் அதிர்ச்சிக்கு ஆளாகினர். அவ்வளவுதான்...

அலறியடித்து ஒரு கி.மீ. தூரத்துக்கு பிறகு தான் ஓட்டத்தை நிறுத்தியிருக்கின்றனர். ‘‘தங்கப்புதையலை சித்தர் காவல் காக்கிறார். அவருக்கு காவலாகத்தான் ஒற்றைக்கண் பூதம் அங்கு வாசம் செய்து வருகிறது. யாராவது பாதாள குகைக்குள் சென்று புதையலை எடுக்க முயற்சித்தாலோ, சித்தரை தொந்தரவு செய்ய நினைத்தாலோ அந்த பூதம் சும்மா விடாது. அப்படியே அலாக்காய் தூக்கி கபளீகரம் செய்து விடும். அதனால், நாங்கள் யாரும் இருட்டின பிறகு அந்தப் பக்கம் போக மாட்டோம். பகலில்கூட சித்தரை குகை வாசலில் நின்றே வழிபட்டுவிட்டு திரும்பி விடுவோம். உள்ளே சென்று புதையல் ஆராய்ச்சியில் எல்லாம் இறங்க மாட்டோம். பக்தியோடு செல்பவர்களை பூதம் ஒன்றும் செய்வதில்லை. வம்பு செய்யும் புத்தியோடு யாராவது போனால் உயிரோடு திரும்பி வருவது சந்தேகம்’’ என ஒன்றைக்கண் பூதத்தின் பராக்கிரமங்களை சொல்லி பயமுறுத்துகின்றனர் கிராம மக்கள். வெளியே அமைதியாக காட்சியளிக்கும் மலைக்குகை, உள்ளுக்குள் பல மர்மங்களை புதைத்து வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment